நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வரிசையில் நடிகர் அதர்வா நடித்துள்ள ‘தணல்’ திரைப்படமும் இணையத் தயாராகியுள்ளது.
அன்னை ஃபிலிம் புரொடக்ஷன் சார்பில் எம். ஜான் பீட்டர் தயாரிப்பில், இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 12-ம் தேதி உலகளவில் வெளியாகிறது.
சமீபத்தில் திரையரங்கிலும் ஓடிடி தளத்திலும் பிளாக்பஸ்டர் ஹிட்டாகிய அதர்வா முரளியின் ‘DNA’ படத்திற்கு பின், ‘தணல்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.
படம் குறித்து இயக்குநர் ரவீந்திர மாதவா கூறியதாவது:
“பல அதிரடி காட்சிகளும், கணிக்க முடியாத திருப்பங்களும் நிறைந்த உணர்ச்சிப்பூர்வமான கதையாக ‘தணல்’ உருவாகியுள்ளது. எந்த நிலையிலும் தங்கள் கொள்கையை விட்டுக்கொடுக்காத இரண்டு நபர்களைச் சுற்றி கதை நகர்கிறது.
வாழ்நாள் முழுவதும் துன்பத்தில் தவித்துத் பழிவாங்கும் எண்ணத்துடன் இருக்கும் முன்னாள் ராணுவ வீரர், மறுபுறம் வேதனையான கடந்த காலத்தைக் கொண்டும் நேர்மையாக தனது கடமையை செய்வதிலும் உறுதியாக இருக்கும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள்—இவர்களைக் குறித்தே கதை அமைகிறது.”
நடிகர்கள் குறித்து அவர்கூறியது:
“திரைக்கதையில் கதாநாயகன் அப்பாவித்தனமும், அதே சமயம் அடக்க முடியாத கோபமும் கொண்ட, யாராலும் தடுத்து நிறுத்த முடியாத துணிச்சலான இளைஞன்.
இந்த குணாதிசயங்களுக்குப் பொருத்தமானவர் அதர்வா முரளி என்பதால் அவரையே தேர்வு செய்தோம். முன்னாள் ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் பல அடுக்குகள் இருக்கும்; அதற்காக நீண்ட யோசனையின் பின் அஸ்வின் காகமனுவை தேர்வு செய்தேன். அவரது நடிப்பை ரசிகர்கள் கண்டிப்பாக பாராட்டுவார்கள்.”
இந்தப் படத்தில் லாவண்யா திரிபாதி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஷா ரா, பாரத், லட்சுமி பிரியா, அழகம் பெருமாள் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆக்ஷன், உணர்ச்சி, விறுவிறுப்பான திரைக்கதை, நடிகர்களின் திறமையான நடிப்பு—இவையனைத்தும் ஒருங்கிணைந்து உருவாகியுள்ள ‘தணல்’ உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை செப்டம்பர் 12 அன்று சந்திக்க வருகிறது.
