தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டி வேலை பார்த்து வருபவர் காந்தி. காந்தி தனது மனைவி கண்ணம்மா மீது மிகுந்த பாசம் கொண்டவர்.
கண்ணம்மா ஆசை பட்டு விட்டார் என்கிற ஒரே காரணத்திற்காக தங்களது அறுபதாம் கல்யாணத்தை மிக சிறப்பாக நடத்த காந்தி முடிவு செய்கிறார்.
ஒரு நிகழ்ச்சியில் இப்படிப்பட்ட விழாக்களை நடத்தி வரும் கதிரை காந்தி சந்தித்து தங்களது அறுபதாம் கல்யாணத்தை நடத்தி தருமாறும் அதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதையும் கேட்கிறார்.
கதிரோ செலவு 52 லட்சம் ஆகும் என்று கூறி விட்டு அவ்வளவு பணம் காந்தியிடம் இருக்கிறதா என்று சந்தேகப் படுகிறார்.
ஆனால் சொந்த ஊரில் பல கோடி ரூபாய் பெறுமான நிலத்தை வெறும் 80 லட்சத்திற்கு விற்று விட்டு, அந்த பணத்துடன் வருகிறார் காந்தி.
அறுபதாம் கல்யாண ஏற்பாடுகள் ஆரம்பிக்கின்ற நேரத்தில், பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மத்திய அரசால் அமல் படுத்தப்படுகிறது. காந்தியிடம் இருக்கும் பணத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் மாற்ற முடியாத நிலை ஏற்படுகிறது.
பணத்தாசையில் கதிரும் சில வேலைகளை செய்கிறார். அதுவும் ஒர்க் அவுட் ஆகாமல் போகிறது.
தடைகளை மீறி காந்தி கண்ணம்மா அறுபதாம் கல்யாணம் நடந்ததா இல்லையா அறுபதாம் கல்யாணத்தை காந்தி சிறப்பாக நடுத்த விருப்பப்படுவது ஏன் கதிர் அதனை நடத்தி வைத்தாரா இறுதியில் நடந்தது என்ன என்பது தான் படத்தின் மீதிக் கதை.
காந்தியாக பாலாஜி சக்திவேல் மனைவி சமைத்து கொடுக்கும் தயிர் சாதம்,புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதத்தை சாப்பிட்டு புகழ்ந்து தள்ளும் போதும் 60 வயதிலும் மனைவி மீது பாசம் உள்ளவராக சிறப்பாக நடித்துள்ளார்.
என்ன நீங்க எப்ப பார்த்தாலும் சாப்பிட்டு விட்டு மனைவியிடம் நல்லா இருக்குன்னு சொல்றீங்களே என்று கேட்கும் போது ஓட்டல்ல சாப்பிட்டு விட்டு யாருன்னு தெரியாத வெய்டருக்கு டிப்ஸ் கொடுக்கும் போது மனைவியிடம் சமையல் நல்லா இருக்குன்னு தாராளமா சொல்லலாம் என்று கூறும் காட்சி அருமையான ஒன்று.
கண்ணம்மாவாக அர்ச்சனா அவர் நடிப்பை பற்றி சொல்லவே வேண்டாம். கிளைமாக்ஸ் காட்சியில் நடிப்பில் பின்னி எடுத்து விடுகிறார்.
கதிராக பாலா முதல் படத்தில் நகைச்சுவயாக நடிக்காமல் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார். எமோஷனல் காட்சிகளில் நடிக்க இன்னும் பயிற்சி தேவைப்படுகிறது.
கீதாவாக நடித்த நமிதா கிருஷ்ணமூர்த்திக்கு அதிக வேலையில்லை. படத்தில் நடித்த பிற கலைஞர்கள் அனைவரும் தங்களது பங்களிப்பை குறையின்றி செய்துள்ளனர்.
பின்னணி இசையும் பாடல்களும் ஓகே ரகம். ஒளிப்பதிவாளர் தனது பணியை கச்சிதமாக செய்திருக்கிறார்.
இயக்குனர் ஷெரிஃப் ஒரு வயதான தம்பதியினரின் அறுபதாம் கல்யாண ஆசை, அவர்களது இளமை காதல், குழந்தை இல்லாத போதும் ஒருவர் மேல் ஒருவருக்குள்ள பாசம் போன்றவற்றை சிறப்பாக காட்டியுள்ளார். கிளைமாக்ஸ் காட்சியும் அருமை. கண்ணாடிக்கான விளக்கத்தை இறுதியில் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
இருப்பினும் சீரியஸான கதையில் காட்சிகளில் அழுத்தம் இல்லாமல் இருப்பது குறையாக தெரிகிறது. பாலாவின் பின்னணி பணத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை இயக்குனர் சற்று தெளிவாக காட்டியிருக்கலாம்.
மொத்தத்தில் எமோஷனல் காட்சிகளை அழுத்தத்துடன் கொடுத்திருந்தால் பார்வையாளர்களுடன் படம் கனெக்ட் ஆகியிருக்கும்.
