இந்தியா தபால்துறை, கர்நாடக அஞ்சல் வட்டாரம் மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து, கர்நாடகாவின் செழுமையான பாரம்பரிய கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில், சிறப்பு கவர், இரண்டு அஞ்சல் அட்டைகள் மற்றும் கேன்சலேஷன் ஸ்டாம்ப் ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. தேசிய விருது பெற்ற காந்தாரா திரைப்படத்தில் வலுவாக வெளிப்படுத்தப்பட்ட புனிதமான பூதகோலா மரபை இந்த வெளியீடு சிறப்பிக்கிறது.
செப்டம்பர் 22 அன்று பெங்களூருவில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊடகத்தினரும் கர்நாடக அஞ்சல் வட்டார அதிகாரிகளும் பங்கேற்றனர். காந்தாரா படத்தின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டி, கர்நாடக அஞ்சல் வட்டார இயக்குநர் (முகாம்) சந்தேஷ் மகாதேவப்பா, பெங்களூரு GPO முதன்மை அஞ்சல் மாஸ்டர் H.M. மஞ்சேஷா, ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பாளர் விஜய் கிராகந்தூர் ஆகியோர் இணைந்து இந்த சிறப்பு அஞ்சல் வெளியீட்டை நிகழ்த்தினர்.
பூதகோலா காட்சியுடன் வடிவமைக்கப்பட்ட கேன்சலேஷன் ஸ்டாம்ப், சேகரிப்போருக்கான அரிய வெளியீடாகவும், கர்நாடகாவின் உயிரோடும் வாழும் மரபுகளை பிரதிபலிக்கும் பெருமைக்குரிய நினைவுச் சின்னமாகவும் திகழ்கிறது.
நிகழ்வில் பேசிய ரிஷப் ஷெட்டி, “காந்தாரா எங்கள் மரபின் வேர்களையும் வழிபாட்டு முறைகளையும் கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டது. இந்திய தபால் துறை சிறப்பு கவர் மற்றும் அஞ்சல் அட்டைகள் மூலம் இதை கௌரவித்துள்ளது என்பது பெருமை. இது படத்திற்கான அங்கீகாரம் மட்டுமல்ல; நம் கலாச்சாரம், நம் மக்களுக்கான அங்கீகாரமும் ஆகும்” என்றார்.
சிறப்பு அங்கீகாரமாக, “காயகவே கைலாச” என்ற சொற்றொடரை ரிஷப் ஷெட்டி ஒரு அஞ்சல் அட்டையில் எழுதிப் பதிவு செய்தார். உழைப்பின் புனிதத்தையும் பக்தியையும் பிரதிபலிக்கும் இந்த நிலையான தத்துவம் காந்தாரா படத்தின் கதையிலும் பிரதிபலிக்கிறது.
தயாரிப்பாளர் விஜய் கிராகந்தூர், “இந்திய தபால் துறையின் இந்த அங்கீகாரம் படத்திற்கும் மட்டுமல்ல; கர்நாடகாவின் செழுமையான பாரம்பரியத்திற்கும் ஒரு பெருமை. இப்படியான முயற்சிகள் நம் பாரம்பரியத்தைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும். காந்தாரா எங்கள் வேர்களை உலக மேடையில் பெருமையுடன் வெளிப்படுத்தியிருக்கிறது” என்றார்.
சிறப்பு கவர், அஞ்சல் அட்டைகள் மற்றும் கேன்சலேஷன் ஸ்டாம்ப் ஆகியவை, மனிதன்–இயற்கை–பாரம்பரியம் ஆகியவற்றின் ஆழ்ந்த ஆன்மீக பிணைப்பை வெளிப்படுத்திய காந்தாரா திரைப்படத்திற்கான அஞ்சலியாகும். இந்த முயற்சியின் மூலம், இந்திய தபால் துறை மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ், கர்நாடகாவின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தவும், ஒற்றுமை, நம்பிக்கை, கலாச்சார மரியாதை போன்ற காலமற்ற மதிப்புகளை மக்களிடம் நினைவூட்டவும் முன்னெடுத்து உள்ளன.
இந்த வெளியீடு, இந்திய தபால்துறை பாரம்பரியத்தையும் காந்தாரா படத்தின் சினிமா பாரம்பரியத்தையும் இணைக்கும் பெருமையான தருணமாகும். கலாச்சாரத்தையும் சமூகத்தையும் இணைக்கும் நம் வேர்களை கௌரவிக்கும் அடையாள முயற்சியாக இது திகழ்கிறது.
