செம ட்ரிக் நடிகர் நாகேஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாதவர். அவரை போல் இன்னொரு நடிகரை இன்றுவரை தமிழ் சினிமா பார்க்கவில்லை என்பதுதான் எதார்த்தம். மேலும் அவர் போன்று வேறு யாரும் நடிக்கக்கூட முயற்சி செய்யமாட்டார்கள். அந்த அளவுக்கு நாகேஷின் நடிப்பு தனித்தன்மையுடன் இருந்தது.
இந்நிலையில் அவர் குறித்த ஒரு விஷயத்தை பார்க்கலாம். கோலிவுட்டில் எத்தனையோ காமெடி, குண்சித்திர நடிகர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களில் எல்லாம் நாகேஷ் எப்போதுமே தனித்துவமானவர். மனமுள்ள மறுதாரம் படம்தான் அவருக்கு முதல் படம். ஆனால் முதல் படம் பெரிய வெற்றி பெறவில்லை.
அப்படிப்பட்ட நிலைமையில்தான் நெஞ்சில் ஒரு ஆலயம் படத்தில் நடித்தார் நாகேஷ். அந்தப் படம் இருட்டில் கிடந்த நாகேஷின் திரை வாழ்க்கைக்கு வெளிச்சத்தை கொடுத்தது. தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த அவருக்கு சர்வர் சுந்தரம்தான் சொல்லிக் கொள்ளும்படியான முதல் ஹிட் படமாக அமைந்தது. அதன் மூலம் பலரிடமும் பிரபலமடைந்த அவருக்கு திருவிளையாடல் திரைப்படம் அடுத்த திருப்புமுனையாக அமைந்தது. அதில் சிவாஜி கணேசனுக்கு போட்டியாக நடித்து அப்ளாஸை அள்ளினார்.
தொடர்ந்து அவர் நடித்த நீர்க்குமிழி, காதலிக்க நேரமில்லை, பட்டினத்தில் பூதம், தில்லானா மோகனாம்பாள் உள்ளிட்ட பல படங்கள் மெகா ஹிட்டடித்தன.
காமெடி ரோல் மட்டுமின்றி வில்லன், குணசித்திரம் கதாபாத்திரங்களிலும் கலக்கி எடுத்தவர் அவர். கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார் அவர். அதேபோல் நம்மவர், பூவெல்லாம் உன் வாசம், பூவே உனக்காக என பல படங்களில் கேரக்டர் ரோலிலும் அதகளம் செய்தவர். எந்த ரோல் கொடுத்தாலும் எளிதாக அதுவாகவே மாறிவிடும் அந்த வித்தை பலருக்கும் இன்றுவரை கைகூடாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நாகேஷை பொறுத்தவரை திரையில் மட்டும் காமெடி செய்பவர் இல்லை. நிஜ வாழ்க்கையிலும் எல்லோரையும் கலாய்த்து தள்ளிவிடுவார். அதனால்தான் சீன் பேப்பரில் இல்லாத வசனங்களைக்கூட உடனுக்குடன் சொல்லக்கூடிய நபராக திகழ்ந்து கொண்டிருந்தார்.
அபூர்வ சகோதரர்கள் படத்தில் அப்பு கமலை பார்த்து பாதிதான் இருக்கு என்ற வசனம், பஞ்ச தந்திரம் படத்தில் பாலத்தில் சிறுநீர் கழிக்க போகும்போது வரும் வசனம் எல்லாம் அவர் ஸ்பாட்டில் அடித்ததுதான்.
அதேபோல் பண விஷயத்திலும் கறாராக இருப்பாராம் நாகேஷ். ஏதாவது ஒரு படத்தில் நடிக்கும்போது அந்த தயாரிப்பு நிறுவனம் சம்பள பாக்கி வைத்துவிட்டால் டப்பிங் வரைக்கும் எதுவுமே கேட்கமாட்டாராம். டப்பிங் நெருங்கும்போது அவரை அழைக்க கம்பெனி ஆட்கள் வந்தால், தொண்டையை வேண்டுமென்றே கட்டிக்கொண்டு வேறு குரலில், ‘அய்யோ இப்போ வந்து கேட்குறியே. குரல் இப்படி இருக்கே. சரி அந்த பேமெண்ட் பாக்கி என்ன ஆச்சு’ என கேட்பாராம். அதற்கு அவர்கள், கையோடு எடுத்து வந்திருக்கிறேன் என சொன்னால் உடனே அதை வாங்கி நார்மலான குரலில் சரி டப்பிங்கை வைத்துக் கொள்வோம் என்று சொல்வாராம். ஒரு ரூபாயைக்கூட வசூலிக்காமல் விடமாட்டாராம் நாகேஷ். இதனை அவரே ஒரு மேடையில் பகிர்ந்துகொண்டார்.