ரஜினி – கமல் நடிக்கும் படத்துக்கு இளையராஜா ஏன் இசையமைக்கக் கூடாது? பெரிய நடிகர்கள் நடிக்கும் ஜனரஞ்சகமான ஒரு படத்துக்கு இளையராஜா கடைசியாக எப்போது இசையமைத்தார்? இந்த யோசனையும் விருப்பமும் ஏன் யாருக்கும் வருவதில்லை? உங்கள் இசை ரசனை அவ்வளவுதானா இயக்குநர்களே? ரூ. 200 கோடி பட்ஜெட் கொண்ட படங்களில் பழம்பெரும் கலைஞர்களான ரஜினியும் கமலும் மணி ரத்னமும் வேலை செய்யலாம்.
இளையராஜா மட்டும் அதற்கு லாயக்கில்லை என்பது தர்க்கமில்லாத வாதம் இல்லையா? தெலுங்கில் 64 வயது கீரவாணிக்கு இன்றைக்கும் பெரிய படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இளையராஜாவுக்குக் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக என்ன மாதிரியான படங்களுக்கு இசையமைக்கக் கிடைக்கின்றன என்று பார்த்தால் பெரும்பாலும் உப்புமாப் படங்கள் அல்லது அழுவாச்சிப் படங்கள். தவிரவும் கிராமத்துப் படம், கதாநாயகன் ஒரு கொள்கைக் குன்று என்றால் மட்டும்தான் இவர்களுக்கு இளையராஜாவின் இசை ஞாபகத்துக்கு வரும்.
தப்பித் தவறி காதல் படங்களுக்கு அவரை அழைத்து பாடல்களும் அற்புதமாக அமைந்து, அப்பாடல்கள் ரசிகர்களிடமும் கேசட்/டிவிடி விற்பனையிலும் பெரிய வரவேற்பு பெற்றிருந்தாலும் படம் படுதோல்வியடைந்தால் முதல் பழியை ராஜாவின் இசை மீதுதான் போடுவார்கள். நைஸாக அடுத்தப் படத்துக்கு வேறு இசையமைப்பாளரிடம் சென்றுவிடுவார்கள்.
உண்மையில் இளையராஜாவின் இசைக்குத் தமிழ்த் திரையுலகம் 1990களிலேயே சமாதி கட்டிவிட்டது. அகஸ்மாத்தாக 10 வருடத்துக்கு ஒருமுறை ஒரு பெரிய படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிட்டும். அப்போது ஒரு கை பார்த்துவிடுவார். கடைசியாக, எந்தப் பெரிய படத்தில் ராஜாவின் இசை கேவலமாக, காலத்துக்குத் தகுந்தாற் போல இல்லாமல் இருந்தது? பிதாமகன், நீதானே என் பொன் வசந்தம், மாடர்ன் லவ் சென்னை, விடுதலை போன்ற பெரிய படங்களின் இசை பேசப்படவில்லையா? ரசிகர்கள் கொண்டாடவில்லையா? ஆனாலும் இந்தப் புறக்கணிப்பு ஜோராகப் பல பத்தாண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது.
ராஜாவைப் போல இளகிய மனது யாருக்கும் இருக்க முடியாது. தன்னை இந்தத் திரையுலகம் கேவலமாக, பாகுபாட்டுடன் நடத்துவது குறித்து அவருக்கு எந்தப் புகாரும் கிடையாது. பேட்டிகளில், மேடைகளில் புலம்பியது கிடையாது.
மேடைகளில் திரைக் கலைஞர்கள் தன்னைப் போலியாகப் பாராட்டும்போதும் அவர் சலனப்படுவதில்லை. ஜென் நிலையில் இந்தப் பிரச்னையை அணுகி வருகிறார். ஆயிரம் ஆண்டுகள் கழித்துப் பேசப்படும் ஓர் இசையை வழங்குபவருக்கே இந்தளவுக்குத்தான் மரியாதை அளிக்கப்படுகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
