கென் இயக்கி, நடித்திருக்கும் ‘யூத்’ , புதிய தலைமுறை இளைஞர்களின் குரலில் பேசி, கல்வியை ஆதரிக்கும் ஒரு பொழுதுபோக்குத் திரைப்படம்.
படம் முழுக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், இறுதி 5 நிமிடக் காட்சிகளில் அவை சரிசெய்யப்படும். படம் முழுக்க லவ்வு, காஜி, பொண்ணுங்க என்று சுத்தலாம். இறுதியில் திருந்தி, லவ் வேண்டாம்.
படம் முழுக்க அப்பாவை அந்தாளு, இந்தாளு, அவன் இவன் என்று ஏகவசனம் பேசலாம். இறுதியில் திருந்தி, “அப்பாஆஆஆ” என்று கட்டிப்பிடிக்க வேண்டும். படம் முழுக்க அப்பாவி அம்மாவை திட்டிக்கொண்டே இருப்பது. இறுதியில் திருந்தி, அம்மாவுக்காக மாறுவது.
படம் முழுக்க படிக்காமல், பெயில் ஆகிக்கொண்டே இருக்கலாம். இறுதியில் இரண்டே நாட்களில் எல்லாமே படித்து, ஸ்கூல் ஃபர்ஸ்ட்.
படம் முழுக்க முழுக்க அசிங்கமான சேட்டை யாவும் செய்யலாம், இறுதியில், “ஏன் நாங்கல்லாம் ஜெயிக்கக் கூடாதா..?” என்று வசனம்.
இப்படி இந்த “படம் முழுக்க” to “இறுதி காட்சி” டெம்ப்ளேட்டை கொஞ்சம் கூட மாற்றாமல் தனது முன்னோரான தனுஷ், சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் பாணியில் அப்படியே டிட்டோ அடித்து….. சரி வேண்டாம்.
ஆனால் இந்த, “ஏன் நாங்கல்லாம் ஜெயிக்கக்கூடாதா…?” என்ற கேள்வி கேட்பதற்குமுன் கடுமையான உழைப்பு இருக்கவேண்டும். படித்து முன்னேற வேண்டும் என்ற அக்கறை இருக்க வேண்டும். நீ அப்படி செய்வதற்கு இந்த சமூகம் தடையாய் இருந்து, உன் நிறத்தையும் உன் பிறப்பையும் வைத்து உன்னை கீழே தள்ளிவிட்டால், அப்போது நீ கேக்கலாம்.
“ஏன் நாங்கல்லாம் ஜெயிக்கக் கூடாதா..?”
ஒன்றே ஒன்று மட்டும்தான் தோன்றுகிறது. முதன் முதலில் ஒருத்தன் இந்த Template-ல் படம் எடுத்தான் பாரு, அவன் ஜெயித்திருக்கக் கூடாது. என்றே கூற தோன்றுகிறது.
படம் பார்க்கையில் உங்களுக்கு எது ஞாபகம் வருகிறதோ இல்லையோ. எழுதும்போது எனக்கு “மான் கராத்தே” ஞாபகம் வருகிறது.
“பாக்ஸிங்”கை உயிராய் நேசிக்கும் ஒருவன், அதிலேயே ஊறிப்போன ஒருவன், அதில் பெறும் வெற்றியையே கனவாய் காணும் ஒருவன், அதில் பெறும் வெற்றிக்காக ஏங்கும் ஒருவன் இருக்க, ஹீரோயின் பின்னாடி சுற்றுவதைத் தவிர வேறு எந்த வேலை வெட்டிக்கும் போகாத ஒருவன், திடீரென கிளைமேக்சில், ஆடியன்ஸை பார்த்து,
“ஏன் நாங்கல்லாம் ஜெயிக்கக் கூடாதா..?” என்று தனது நிறம், வடசென்னை வாசம், சாதி என எல்லா கலவையையும் வைத்து கண்ணீரோடு எமோஷனல் பிச்சை கேட்கும்போது, “ச்சோ பாவம்.. நாங்க ஜெயிக்க வைக்கிறோம்..!” என்று நாம் படத்தை ஜெயிக்கவைக்கும்போது,
அந்த கனவு காண்பவனை, முயற்சி செய்பவனை, உண்மையாய் உழைப்பவனை, நம்மையறியாமல் தோற்கவைத்துக்கொண்டிருக்கிறோம். இனியும் வைப்போம்.
படத்துல ஒரேயொரு பாஸிட்டிவ் விஷயம். கதை 10-15 வருடத்துக்கு முன்பு நடப்பதை போல் காட்டியிருப்பதால், இந்த ஸ்கூல் யூனிபார்ம், பள்ளிக் காதல், இன்டர்நெட்டில் பிட்டு படம், இதெல்லாம் பார்த்து… 2k கிட்ஸுக்கே இந்தப்படம் ரொம்பவே Crinje ஆகத்தான் இருக்கிறது என்கிறார்கள். தெளிவு.
