“இதயம் முரளி” டிரெய்லர் பார்த்த போது உடனே ‘இதயம்’ தான் இதயத்திலிருந்து வெளியே வந்துவிட்டது.
இதயம் ஒரு ‘ஒரு தலைக்காதல்’ படமென்றாலும் அது தனித்து நின்றது அதன் மேக்கிங்கில் தான். கதிர் ஒரு டிசைனர் என்பதால் காட்சிகளை அழகாக செதுக்கி இருந்தார்.
படத்தில் முரளி கிராமத்திலிருந்து நகருக்கு டாக்டருக்கு படிக்க வரும் இளைஞன். அது அவருக்கு அழகாக செட்டானது. நாயகி ஒரு படித்த, பெரியவீட்டு நகரப்பெண். ஹீராவின் உயரமும், குதிரைக்கு வாலும், முகத்தில் முன் தொங்கும் முடி போல ஒரு ஹேர்ஸ்டைலுமாக ஹீரா குதிரை போலவே அந்த கேரக்டருக்கு மிகப்பொருத்தம்.
அப்பா, அம்மா ராணுவத்தில் மருத்துவத்துறையில் இருந்ததால், வட இந்தியாவில் வளர்ந்ததால் ஹீராவுக்கு இயல்பாகவே நார்த் இன்டியன் லுக் இருந்தது. காஷ்மீருக்கு சென்றிருந்த போது ஹீராவுக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. இன்றைய அனில் அம்பானியின் மனைவியாக இருக்கும் டினா முனிமுக்கு டூப்பாக நடிக்கும் வாய்ப்பு. ஆனால் ஹீரா ஏற்கவில்லை. இயக்குனர் சுபாஷ் கய் அடுத்து அழைக்க அப்போதும் நடிக்கவில்லை. கடைசியாக சத்யஜோதி தியாகராஜன் கன்வின்ஸ் செய்து நடிக்க வைத்திருக்கிறார்.
சும்மா சொல்லக்கூடாது. ஹீராவுக்கு நல்ல நல்ல. வாய்ப்புகள் வந்தன.மணிரத்னத்தின் திருடா, திருடாவெல்லாம் அவரே எதிர்பார்க்காத வாய்ப்பு. Fugitive படத்தின் ரீமேக்கான ‘நிர்ணயம்’ என்கிற படத்தில் மோகன்லாலுக்கு ஜோடி. ஜென்டில்மேன் படத்தை சிரஞ்சீவி ஹிந்தியில் எடுத்த போது சுபாஸ்ரீயின் ரோல் ஹீராவுக்கு. தமிழில் கமலுடன் அவ்வை சண்முகி. ‘சதி லீலாவதி’யில் மெயின் ரோல். பாலுமகேந்திரா தன் கோகிலா படத்தை ஹிந்தியில் எடுத்த போது கோகிலாவாக ஹீரா தான் நடித்தார். ஷோபா செய்த ரோல் அது.
வசந்தின் நீ பாதி நான் பாதி, நடிகர் கிட்டியின் தசரதன், தேசிய விருது பெற்ற ‘காதல் கோட்டை’யின் அந்த நேயா கேரக்டரை மறக்க முடியுமா?.
இவை எல்லாவற்றுக்கும் Base இதயம் தான். ஆனால் ஹீராவுக்கு நேர்மறை நாயகியாக நல்ல பாத்திரம் மக்களிடம் பதியவில்லை.
இதயம் படத்தை சுவாரசியமாக்கியது இளையராஜா தான். படம் முழுக்க காதலை சொல்லாததையே காட்டிக்கொண்டிருக்க முடியாதென இரண்டு பாடல்களை படத்துக்கு சம்மந்தமே இல்லாத இருவரை நடிக்க வைத்து டான்ஸர்களின் நடனங்களை துவக்கி வைத்தார் கதிர். சுந்தரம் மகன் பிரபு தேவா, ராஜுவை இரண்டு பாடல்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார். பின் நிறைய படங்களில் இதேப்போல் டான்ஸ் மாஸ்டர்கள் ஆடத்துவங்கினார்கள்.
முரளி நடந்து வரும் போது சாலையில் அங்கங்கே தண்ணீர் தேங்கி இருக்கும். அதில் காலை வைத்து வரும் முரளி அடுத்த அடி வைக்கும் முன் தண்ணீரில் ஒரு முகம் திரும்பும். ஹீரா. அழகான கவிதை போன்ற அறிமுகம்.
‘முதல்பாவம்’ என்கிற படத்தில் நடித்த அபிலாஷாவுக்கு அடுத்தப்படமான இதில் ஹீராவின் அக்கா வேடம். படத்தில் முரளியை விட சின்னி ஜெயந்துக்கு வசனம் அதிகம். சின்னியும் மனதை தொட்டு விடுவார்.
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா, பூங்கொடி தான் பூத்ததம்மா, இதயமே பாடல்கள் ராஜாவின் மாஸ்டர் ப்ளாஸ்டர்கள். ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான் பாடல் மற்றொரு நான் சிரித்தால் தீபாவளி. மலேஷியா வாசு கொஞ்சி இருப்பார்.
காதலை சொல்லாத இதயம் கடைசியில் கெட்டுப்போகிறது. டாக்டருக்கு படிக்க வந்த முரளி நோயாளியாக திரும்ப அவருக்கு ரயில் நிலையத்தில் தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் எடுக்க பாட்டிலை எடுத்த ஹீராவின் கண்ணீர் தண்ணீரோடு கலக்க நோயாளி முரளி அதை குடிக்க ஹீராவின் கண்ணீர் ‘இதயம் முரளி’யின் இதயம் ஆறும் என்கிற வசனத்தோடு படம் முடியும்.
