செம்மலர் அன்னம் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான “மயிலா” திரைப்படத்தை, நியூட்டன் சினிமா கம்பெனி தயாரிப்பில் பிரபல இயக்குனர் பா. இரஞ்சித் வழங்குகிறார். 55வது ரொட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா (IFFR)வில் நடைபெறும் “பிரைட் ஃப்யூச்சர்”பிரிவில் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 8, 2026 வரை திரையிடப்படுகிறது.
தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தை பின்னணியாகக் கொண்ட “மயிலா” திரைப்படம், தனது சுதந்திரத்திற்காகவும் சுயமரியாதைக்காகவும் போராடும் பெண்ணான பூங்கொடியின் கதையைச் சொல்கிறது. அவளது மகளான சுடர் என்பவளின் பார்வையில், தன் வாழ்வின் ஒவ்வொரு நாளும் அன்பும் வேதனையும் தாங்கியுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பேசப்படாத தைரியத்தை இப்படம் மூலம் பிரதிபலிக்கிறது.
“மயிலா படம் மூலம் சொல்லவரும் செம்மலரின் குரலானது தனித்துவமானது மற்றும் துணிச்சலானது” என்கிறார் நியூட்டன் சினிமாவின் நிறுவனர் ஆண்டோ சிட்டிலப்பிள்ளி. மேலும் அவர், “அவரது இந்த இயக்கம் உணர்ச்சிக் குவியல்களுக்கு மத்தியில், ஒரு ஆழமான சமூகப்பார்வையை முன் வைக்கிறது” என்று கூறினார்.
இ்பபடம் பற்றிப் பேசிய இயக்குனர் பா. இரஞ்சித், ” ‘மயிலா’ எளிய பின்னணியிலிருந்து வரும் உழைக்கும் பெண்களின் வாழ்வியல் சிக்கல்களை; அவர்களின் மன ஓட்டத்தை; உலகை மிக அற்புதமாகப் பேசியிருக்கிறது. எளிய திரைமொழியில், மிக இயல்பாகவும் மிக நுட்பமாகவும் பேசவேண்டிய ஒரு பெண்ணுலகைப் பதிவுசெய்திருக்கிறார் இயக்குநர் செம்மலர் அன்னம்” என்றார்.
மயிலாவாக மெலோடி டார்கஸ் நடித்துள்ளார். அவர் பத்தாண்டுகளுக்கும் மேலான மேடை அனுபவம் கொண்ட திறமையான நாடக நடிகை. வி. சுடர்கொடி தனது முதல் திரைப்படப் பாத்திரமாக பூங்கொடியின் மகளாக மிக இயல்பாக நடித்துள்ளார். மேலும் கீதா கைலாசம், சத்யா மருதானி, ஆட்டோ சந்திரன், RJ பிரியங்கா, மற்றும் ஜானகி சுரேஷ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
சுயாதீன திரைப்பட இயக்குனர் அருண்மொழி சிவபிரகாசம் அவர்களிடம் பயிற்சி பெற்ற செம்மலர் அன்னம், பல புகழ்பெற்ற தமிழ் திரைப்படங்களில் நடித்தவர்.
