இப்போதெல்லாம் பின்னணி பாடல்களை பாடினால், அந்த பாடலை பாடியது யார் என்று கண்டுபிடிப்பது பெரிய கடினமாகிவிட்டது.
ஆனால் சொர்ணலதா அப்படி ஒரு வாய்ப்பையே ரசிகர்களுக்கு வைக்கவில்லை. இந்த பாட்டு பாடியது ஸ்வர்ணலதாவேதான் என்று உறுதியாகவே தெரிந்துவிடும். அந்த அளவுக்கு ஒரு பரிச்சயம் வாய்ந்த குரல்.
அவரது உச்சரிப்பை கேட்டால், இவர் தாய்மொழி இன்னதுதான் என்று உறுதியாகவே சொல்ல முடியாது. அவ்வளவு வளம் கொழிக்கும் உச்சரிப்பு அந்த பாடல்களில்!!
அவ்வளவு இனிமை செறிக்கும் அந்த குரலில்!! துள்ளலின் உணர்வும், மகிழ்ச்சியின் எல்லையும், ரணத்தின் வலிகளும், சோகத்தின் வடுக்களும், என எல்லாவித உணர்வுகளையும் பாட்டில் குழைத்து தந்தார் ஸ்வர்ணலதா. பாடிய பாட்டுக்களில் எதை சொல்ல, எதை விட? இவர்குரல் செய்த ஜாலங்கள்தான் என்னே.
அதனால்தான் இளையராஜாவும் சரி, ஏ.ஆர்.ரகுமானும் சரி இருவருமே ஸ்வர்ணலதாவின் குரலை அதிகமாகவும், மிகச்சரியாகவும் பயன்படுத்தி கொண்டனர். ரங்கீலாவில் ஹை ராமா என்ற பாடலாக இருந்தாலும், கருத்தம்மாவில் போறாளே பொன்னுதாயி என்ற பாடலாக இருந்தாலும் ஸ்வர்ணலதா கீதங்களில் எல்லாமே சிறப்புதான்.
23 வருட சினிமா வாழ்க்கை, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 7,500-க்கும் மேற்பட்ட பாடல்கள்.. கீ போர்ட், ஹார்மோனியம் வாசிக்கும் திறமை…
தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட மாநில அரசுகளின் விருதுகள்… தேசிய விருது என பெற்றிருந்தாலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை துயரமானது. தாய்-தந்தையரை சிறுவயதிலேயே இழந்தார்.
அமைதியான சுபாவம்
எவரிடமும் பேசிக்கொள்ளாத தனிமை விரும்பி.. மிகப்பெரிய குடும்பத்தை தனது வருமானத்தால் மட்டுமே காப்பாற்ற வேண்டிய நிலைமைக்கு ஆளானார். தெரிந்ததும், அறிந்ததும், உயிருமானது பாட்டு ஒன்றுதான். சித்ரா, ஜானகி உச்சியில் இருக்கும்போதே தனக்கெனவும் ஒரு உயரத்தை பிடித்தார்.
உச்சத்தை பிடிக்க தெரிந்த அவரால், கடைசிவரை திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைய முடியாமலேயே போய்விட்டது. இதில் நோயும் பீடிக்க தொடங்கியது. இயற்கை ஆளை பார்த்துநோயை தருமா என்ன? நுரையீரல் பாதிப்பால் பலவாறாக அவதிப்பட்டு, சிகிச்சையும் பலன் இன்றி 37 வயதிலேயே மரணமடைந்து விட்டார்.
இன்று அவரது நினைவு நாள்.
