தமிழ் சினிமாவின் தலைசிறந்த நட்சத்திரமாக திகழ்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவர் நடிப்பில் 1987-ஆம் ஆண்டு வெளியான ‘மனிதன்’ திரைப்படம், டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு 38 ஆண்டுகள் கழித்து, வரும் அக்டோபர் 31-ஆம் தேதி மீண்டும் திரைக்கு வருகிறது.
எஸ்.பி. முத்துராமன் இயக்கிய இப்படத்தில் ரஜினி, ரூபினி, ஸ்ரீவித்யா, ரகுவரன் மற்றும் செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சந்திரபோஸ் இசையமைத்த இப்படத்திற்கான அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார். அதில் மலேசியா வாசுதேவன் குரலில் ஒலித்த ‘மனிதன் மனிதன்’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது.
அப்பாடல் உருவான விதம் குறித்து வைரமுத்து தனது பதிவில் தெரிவித்துள்ளார்:
“‘மனிதன்’ திரைப்படம் மறுவெளியீடு காணப்போவதாகக் கேள்விப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த காலத்தில் மற்றொரு இசையமைப்பாளர் உச்சத்தில் இருந்தபோதும், ஏ.வி.எம். நிறுவனம் அதிகம் அறியப்படாத சந்திரபோஸை அழைத்து, என்னிடம் ஆறு பாடல்களை ஒப்படைத்தது. அந்த பாடல்கள் அனைத்தும் அதிரடியாக அமைந்தன.
ஒருநாள் ஏ.வி.எம் அலுவலகத்துக்கு சிற்றுண்டிக்காக வந்திருந்த ரஜினிகாந்த், பக்கத்து அறையில் ஒலித்துக் கொண்டிருந்த ஒரு பாடலைக் கேட்டு ‘இது ரொம்ப நல்லா இருக்கே… யாருடைய படம் இது?’ என்று கேட்டார். அதற்கு, ‘மனிதன்’ படத்துக்காக பதிவு செய்யப்பட்டு இன்னும் இடம் பெறாத பாடல் இது என்று தெரிவித்தனர். உடனே ரஜினி, ‘அய்யய்யோ! இது இத்தனை அருமையான பாட்டு, எப்படியாவது படத்தில் சேர்த்துவிடுங்கள்!’ என்று உறுதியாகக் கேட்டார்.
அதுவே பின்னர் ‘மனிதன் மனிதன் எவன்தான் மனிதன்’ என்ற தலைப்புப் பாடலாக இணைக்கப்பட்டது. இயக்குநர் எஸ்.பி. முத்துராமனும் அதனை ஏற்றுக் கொண்டார். அந்தப் பாடல் பின்னாளில் தெரு தோறும் ஒலித்த ஒரு தேசிய உணர்வுப் பாடலாக மாறியது.
‘மனிதன்’ படத்தை நினைக்கும் போதெல்லாம், என் பாடலுக்கு உயிர் கொடுத்த ரஜினிதான் நினைவுக்கு வருகிறார்,” என்று வைரமுத்து பகிர்ந்துள்ளார்.
