பாரதிராஜா அறிமுகப்படுத்திய கதாநாயகிகளில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் முன்னணி நாயகிகளாக வலம் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர் அறிமுகப்படுத்திய கதாநாயகர்களில் கார்த்திக் மட்டுமே பெரிய அளவு நட்சத்திர உயர்வோடு இருந்தார்.. கார்த்திக் அளவு பெரிய அளவில் இல்லாவிடினும் பாரதிராஜாவின் அறிமுகங்களான நிழல்கள் ரவி, பாண்டியன் , நெப்போலியன் உள்ளிட்டவர்களும் ஃபீல்டில் அவர்களுக்கென்று பேர் சொல்லும்படியான ஒரு இடத்தினை தக்க வைத்திருந்தனர்.
பாரதிராஜா தான் ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தில் அறிமுகப்படுத்திய ராதிகாவை ‘நிறம் மாறாத பூக்கள்’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘பசும்பொன்’, ‘தாஜ்மஹால்’ என மீண்டும் தன் படங்களில் காஸ்ட் செய்திருந்தார். போலவே , ‘அலைகள் ஓய்வதில்லை’ ஆரம்பித்து ‘காதல் ஓவியம்’, ‘வாலிபமே வா வா’ , ‘டிக் டிக் டிக்’ , ‘ஒரு கைதியின் டைரி’, ‘முதல் மரியாதை’ படங்களில் ராதாவையும், ‘மண் வாசனை’ தொடங்கி, ‘புதுமைப்பெண்’, ‘ஒரு கைதியின் டைரி’, ‘தாஜ்மஹால்’ என ரேவதியையும், ‘முதல் மரியாதை’ மற்றும் ‘கடலோரக் கவிதைகள்’ ஆகியவற்றில் ரஞ்சனியையும் என இன்னும் ரஞ்சிதா, அஸ்வினி உள்ளிட்ட தான் அறிமுகப்படுத்திய நடிகைகளை தனது மற்ற படங்களில் மீள பயன்படுத்தியிருக்கிறார்.
நடிகைகளை ஒப்பிட அவரின் கதாநாயகர்களை எடுத்துக் கொண்டால் கார்த்திக்கை ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகம் செய்தவர், தொடர்ந்து ‘வாலிபமே வா வா’ படத்திலும், அதன் பிறகு நீண்ட இடைவெளிவிட்டு ‘நாடோடித் தென்றல்’ படத்திலும் , ‘மண்வாசனை’ பாண்டியனை, ‘புதுமைப்பெண்’, ‘நாடோடித் தென்றல்’ மற்றும் ‘கிழக்குச் சீமையிலே’ ஆகிய படங்களிலும், நிழல்கள் , மண் வாசனை மற்றும் வேதம் புதிது மூன்றிலும் நிழல்கள் ரவி, ‘புது நெல்லு புது நாத்து’ , ‘கிழக்குச் சீமையிலே’ இரண்டிலும் நெப்போலியனையும் பயன்படுத்தி இருந்தார். நாயகிகளை ஒப்பிட அவரின் கதாநாயகர்களை அவர் மீள பயன்படுத்தியது குறைவு. அதிகபட்சமாக மீள பயன்படுத்தியது பாண்டியன் மற்றும் ‘கடலோரக் கவிதைகள்’ ராஜா. இருவருக்கும் தலா நான்கு படங்கள்.
பாரதிராஜாவின் படத்தில் சிறு வேடமாவது கிடைத்துவிடாதா என பல திறமையான நடிகர்க காத்திருக்க, அப்படியொன்றும் பிரமாதமான பர்ஃபார்மர் என்று சொல்ல முடியாத ராஜாவிற்கு நான்கு படங்களில் வாய்ப்பு எப்படி என, அது குறித்து சில நேரம் யோசிப்பேன்.. பிறகு, ராஜா நாயகனாக நடித்த அந்தப் படங்களை யோசித்தால் , அவை ஹீரோக்களுக்கான கதை அல்ல, ஆனாலும் அங்கே ஒரு ஹீரோவும் தேவை என்கிற இடத்தில் பட்ஜெட் நாயகனாக ராஜா , பாரதிராஜாவின் ரெடிமேட் நாயகனாக இருந்திருக்கிறார் என்பது புரிந்தது.
அதுக்கு ஏண்டா அரவிந்தசாமியை வம்பிக்கிழுத்து வச்சிருக்கன்னுதான கேக்க தோணுது.. இல்ல.. ராஜாவும் அரவிந்த்சாமி கணக்காதான் பார்க்க அமெரிக்க மாப்பிள்ளை களையோட இருப்பாப்ள.. அதுக்கோசரம் கோத்துவிட்டேன்..
