ஆசிஃப் அலியை ’சால்ட் அண்ட் பெப்பர்’, ’ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா’ தொடங்கி ’உயரே’ வரை சாக்லெட் பாய் அல்லது மூன்று ஹீரோக்களில் ஒருவர் மாதிரியான கதாபாத்திரங்களிலேயே பார்த்துவிட்டு, முதன்மை நாயகனாக முதன் முறை இந்தப் படத்தில் பார்த்த போது ஆச்சர்யப்படுத்தி இருந்தார்.
ஃபீல் குட் வகையில் அமைந்த அழகான குடும்பச் சித்திரம் இந்தப் படம். படத்தின் கரு திருமணத்திற்குத் ஆயத்தமாகும் ஆண்கள், நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தைக் குறித்தானது. அதிகம் விவாதிக்கப்படாத சமூகப் பிரச்சனையும்கூட. ஆசிஃப் அலி ஒரு பக்கம் என்றால் நாயகி வீணா நந்தகுமாரின் அலட்டல் இல்லாத அமைதியான நடிப்பும் கவனிக்க வைத்தது. தொடக்கத்தில், என்ன ஆசிஃப் அலிக்கு அக்காள் மாதிரி ஒரு பெண்ணை ஹீரோயினா போட்டிருக்காங்க என்று தோன்றியது , ஆனால் கதை நகர நகர வீணா, ரின்சியாக நம் மனதிற்குள் நெருக்கமாக வந்துவிடுகிறார்.
நாயகனின் அக்காள்களாக வரும் பெண்கள், உள்ளூர்வாசியாக வருன் ஜாஃபர் இடுக்கி, ஃபாதராக வரும் சந்தோஷ் கிருஷ்ணன் என படத்தினை யதார்த்தத்திற்கு நெருக்கமாக உணரச் செய்யும் கதாபாத்திர உருவாக்கம் தொடங்கி கதையின் களமாக இருக்கும் இடுக்கியின் வாழ்வியல் முறை வரை டீட்டெயிலிங் அத்தனை ரசனையாக வந்திருக்கிறது.
பொதுவாக, நல்ல திரைப்படங்களாக அறியப்படுகிற எல்லா திரைப்படங்களையுமே திரும்பத் திரும்ப பார்க்கத் தோன்றாது. ஆனால் இந்தப் படம் ஆஹோ ஓஹோ வகையில் வராது எனினும், இதில் எதுவோ ஒன்று மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் கண்ணியைக் கொண்டுள்ளது. 2020 ஆண்டு, முதன் முறை பார்த்த இந்தத் திரைப்படத்தினை , அதன் பிறகு இத்தனை வருடங்களில் சமயம் கிடைக்கும் போதெல்லாம், இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த சில காட்சிகளை திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டே இருப்பது வழமை என்றாகி இருக்கிறது. குறிப்பாக, ஆசிஃப் அலியின் அம்மாவாக வரும் மனோகரி ஜோய் வருகிற எல்லா காட்சிகளும் இந்த மீள் பார்வையில் இருக்கும். மனோகரி ஜோய்க்கு இதுதான் முதல் படமாம். திரையில் பார்த்த அம்மாக்களில் ‘கெட்டியாளானு எண்டே மலாக்கா’ படத்தின் அம்மாவே உண்மைக்கு நெருக்கமான அம்மாவாக என் மனப்பதிவில் தங்கி இருக்கிறார்.
இந்தப் படம் ப்ரைமில் இருக்கிறது. வாய்ப்பிருப்போர் பார்த்துவிட்டு சொல்லவும்.
