பாட்ஷா இடைவேளைக்கு பிறகு ஃப்ளாஷ்பேக் தொடங்கும் போது சிறுவர்களாக அன்வரும், மாணிக்கமும் சேர்வதும், பின் நண்பர்களாக வளர்வதும் பின் அவர்கள் அந்த ஊர் மக்களுக்கு நல்லது செய்யும் நேரத்தில் மார்க் ஆண்டனி அங்கு வந்து பிரச்சினைகள் செய்வதும், இந்த மோதலில் அன்வர் கொல்லப்படுவதுமாக லீனியராக நீண்ட ஃப்ளாஷ்பேக் இருந்ததாம். ரஜினி படத்தைப் பார்த்து விட்டு இரண்டாம் பாகம் சொதப்பி விட்டது என வீட்டுக்குப்போய்விட சுரேஷ் கிருஷ்ணாவுக்கு அடுத்த தலைவலி. மாலை தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் படம் பார்க்க வருகிறார் என்பது தான் அது.
ரஜினியிடம் பர்மிஷன் கேட்டு ரீ எடிட் செய்து ஆர்.எம்.வீக்கு காட்டப்பட்டது தான் இப்போது நாம் காணும் ஃப்ளாஷ்பேக். இந்த ஒட்டல்களால் தான் Flashbackக்குள்ளே இன்னொரு Flashback வைக்க வேண்டி வந்தது. ரஜினியின் வாய்ஸ் ஓவரை பேசியது சுரேஷ் கிருஷ்ணாவே தான். மார்க் ஆண்டனியாக ரகுவரனின் நிறைய காட்சிகளை நாம் மிஸ் செய்து விட்டோம்.
மாணிக் பாட்ஷா இடைவேளையில் மாஸாக ரசிகனுக்கு வரவேண்டுமென தீர்மானித்து மாற்றி எடிட் செய்து செமயான மூட் க்ரியேட் செய்தது சுரேஷின் மூளை தான்.
பாட்ஷாவின் பெருவெற்றியால் மோகன்லால் அதே போல் ஒரு படம் கேட்க சுரேஷ் எடுத்த படம் தான் ‘ப்ரின்ஸ்’. பாட்ஷாவையும், காட்ஃபாதரையும் குலுக்கிப்போட்டு எடுத்த படம் தான் ‘ப்ரின்ஸ்’. ப்ரின்ஸ் படத்தில் லாலின் அப்பா க்ரிஷ் கர்னாட். விஸ்வநாத் என்கிற அவர் ஒரு கேங்ஸ்டர். இவரது மூத்த மகன் நிழல்கள் ரவி. இளையமகன் ஜீவா என்கிற லால். அவருக்கு ஒரு எதிர் கேங்ஸ்டர். அவரது மகன் சூர்யாவாக ப்ரகாஷ்ராஜ். இரு க்ரூப்களையும் சமாதானப்படுத்தும் பாய் கிட்டி.
மோகன்லாலும் அதே போல் டெம்போ ட்ராவலரில் பயணிப்பார். பாட்ஷா போலவே ‘He is walking like a prince…Eating like a prince..prince…prince’ என பாட்ஷா பாரு பாட்டு போல BGM போட்டிருந்தார் தேவா. மோகன்லால் ப்ரேமாவை காதலித்து, திருமணம் செய்து, குழந்தை பிறந்து கேங்ஸ்டர் தொழிலை விட்டு விலகச்சொல்ல கிரீஷ் கர்னார்ட் எதிர்க்க என குழந்தையை தூக்கி வந்து மிக நீண்ட டயலாக் பேசி திருத்துவதோடு படம் முடியும். அம்மா ஸ்ரீவித்யா ஒரு தனி ட்ராக்.
96ல் வந்த இந்தப்படம் லாலுக்கு கொடுமையான தோல்வியாக அமைந்தது. அவர் நடித்தது இரண்டே படம் தான். சிறைச்சாலை(காலாபானி), ப்ரின்ஸ். இது முடிந்து ‘இருவர்’ படம். இரண்டும் தமிழ்நாட்டில் வெளியாகும் படங்களேன்பதால் லால் ப்ரின்ஸ் படத்தை தமிழ்நாட்டுக்கேற்றவாறு செய்திருக்கலாம். மோகன்லால், கணக்கப்பிள்ளை ஒடுவில் உண்ணிகிருஷ்ணனைத்தவிர வேறு மலையாளிகளே படத்தில் இல்லை. இந்த Casting படத்தை கேரளத்தில் அன்னியப்படுத்திவிட்டது. தமிழில் இப்படத்தை ‘மகான்’ என டப் செய்து வெளியிட்டார்கள்.
தோல்விக்கு மற்றொரு காரணம் பாட்ஷாவில் செய்த அதே லீனியர் முறையில் சொல்லப்பட்ட போரிங் திரைக்கதை. க்ளைமேக்ஸில் மோகன்லால் ஒரு ஷாட்டில் மூன்று நிமிடம் டயலாக் பேசுவது லால் எவ்வளவு சிறந்த நடிகர் என உணர்த்தும். என்ன செய்து என்ன பயன்?. தேவா இசையமைத்தும் (தமிழில் வந்த சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது பாட்டை வேறு பயன்படுத்தி இருப்பார்) பாடல்கள் ரெண்டுங்கெட்டான்கள்.
ஒரு காட்சியில் க்ரிஷ் சுடப்பட்டு உடல் நலம் தேறி வீட்டுக்கு வந்து எல்லோரையும் வரவேற்கும் காட்டி அப்படியே Godfather படத்தின் விருந்து காட்சியின் டிட்டோ.
சுரேஷ் கிருஷ்ணா அண்ணாமலைக்கு பிறகு எடுத்த ரோஜாவைக்கிள்ளாதே, வேடன், சிவசக்தி, தர்மச்சக்கரம், ஆளவந்தான், கஜேந்திரா எதுவுமே பாட்ஷாவை நெருங்க முடியவில்லை.
பாட்ஷா தானாகவே அமைந்து விட்ட படம். ரஜினி சொன்ன ஒரு சீனிலிருந்து எழுதப்பட்ட அந்த மாஸ் போல் இன்னொரு படம் கிடையாது.
ஏக் கி பாட்ஷாஹே இஸ் ஜஹாக்கேலியே…..
