தமிழ் சினிமாவில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தனது ஆதிக்கத்தை தக்கவைத்திருக்கும் ஒரே நடிகர் என்ற பெருமை ரஜினிகாந்துக்கே சொந்தம். எண்ணற்ற தோல்விகள், கடுமையான விமர்சனங்கள், ஓய்வு பற்றிய வதந்திகள் என பல சவால்களை எதிர்கொண்டபோதும், ஒவ்வொரு முறையும் புதிய உச்சத்தை எட்டியவர் ரஜினிகாந்த். அதுவே அவரை சாதாரண நட்சத்திரமாக அல்லாமல், ‘சூப்பர் ஸ்டார்’ என்ற தனித்த அடையாளத்துடன் நிலைநிறுத்தியது.
1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரஜினிகாந்த், ஆரம்ப காலங்களில் மூன்று முடிச்சு, அவர்கள், ஆடு புலி ஆட்டம், 16 வயதினிலே, நெற்றிக்கண் போன்ற படங்களில் வித்தியாசமான எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர் முள்ளும் மலரும், பில்லா, காளி, ஜானி, முரட்டுக்காளை, மூன்று முகம், நான் மகான் அல்ல போன்ற திரைப்படங்கள் அவரை மாஸ் ஹீரோவாக மாற்றின.
நினைத்தாலே இனிக்கும், தில்லு முல்லு, ஆறிலிருந்து அறுபது வரை, படிக்காதவன், தர்மதுரை, வீரா, முத்து, அண்ணாமலை, அருணாச்சலம் போன்ற திரைப்படங்கள் சாதாரண மனிதனின் வாழ்க்கையையும் ஸ்டைலுடனும் கம்பீரத்துடனும் திரையில் வெளிப்படுத்தின. பின்னர் பாட்ஷா மற்றும் படையப்பா திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ என்ற வரையறையை மாற்றியமைத்தன.
ரஜினிகாந்தின் வெற்றியின் பின்னணியில் இருந்த மிகப்பெரிய காரணம், காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்ட திறமையாகும். ஒரே மாதிரியான கதைகளை தொடர்ந்து தேர்வு செய்யாமல், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மீறும் முடிவுகளை எடுப்பதே அவரது வெற்றியின் ரகசியமாக அமைந்தது.
2002 ஆம் ஆண்டு வெளியான பாபா திரைப்படம் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது. திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு விநியோகஸ்தர்களின் இழப்பை ஈடு செய்தது மட்டுமல்லாமல், ரஜினிகாந்த் ஓய்வு பெறப்போகிறார் என்ற பேச்சுகளும் பரவின. ஆனால் அந்த தோல்வி அவரது பயணத்தின் முடிவாக இல்லாமல், புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமைந்தது.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான சந்திரமுகி திரைப்படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியது. உளவியல் த்ரில்லர் கதையை மாஸ் ரசிகர்களுக்கும் குடும்ப பார்வையாளர்களுக்கும் ஏற்ற வகையில் வழங்கிய அந்த திரைப்படம், ரஜினிகாந்தின் மிகச் சிறந்த கம்பேக் திரைப்படமாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து சிவாஜி திரைப்படம் முதல் 100 கோடி வசூலை கடந்த தமிழ் திரைப்படமாக சாதனை படைத்தது. பின்னர் எந்திரன் திரைப்படத்தின் மூலம் அறிவியல் புனைகதை உலகிற்குள் காலடி எடுத்து வைத்த ரஜினிகாந்த், இந்திய சினிமாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் புதிய அடையாளத்தை உருவாக்கினார்.
கபாலி திரைப்படத்தின் மூலம் தனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடித்த அவர், இளம் இயக்குநர் பா. ரஞ்சித்துடன் இணைந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அந்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு, தமிழ் சினிமாவில் புதிய சமூக அரசியல் கதைகளுக்கும் வழி வகுத்தது.
அண்ணாத்த திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தபோதும், அதன்பிறகு நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக மாறியது. அந்த திரைப்படம் மீண்டும் ஒருமுறை ரஜினிகாந்தின் மார்க்கெட் மற்றும் ரசிகர் ஆதரவு குறையவில்லை என்பதை நிரூபித்தது.
ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் வித்தியாசமான கதைகளையும் புதிய இயக்குநர்களையும் தேர்வு செய்து மீண்டும் வெற்றி பெறும் திறன் ரஜினிகாந்தின் மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது. அதனால் தான் ஐந்து தசாப்தங்களாக தமிழ் சினிமாவின் உச்சத்தில் அவரது பெயர் தொடர்ந்து ஒலித்து வருகிறது.
ரஜினிகாந்தின் பயணம் வெற்றிகளின் வரலாறு மட்டுமல்ல. தோல்விகளை வெற்றியாக மாற்றிய விடாமுயற்சியின் வரலாறும் கூட. அதனால்தான் அவர் ஒரு நடிகராக மட்டுமல்ல, பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும் சினிமா அடையாளமாகவும், தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டாராகவும் திகழ்கிறார்.
