வீட்ல கண்ணாடி இருக்குதா இல்லியா? அதைப் பாத்தீங்களா, இல்லியா? நகைச்சுவை டாக்டர் நாகேஷ்!

தமிழ் சினிமாவின் பல்வேறு மொழிகளில் புகழ்பெற்ற ஹீரோ ஹீரோயின்கள் திறமை வாய்ந்த நடிகர் நடிகையர் இருப்பார்கள்.

எல்லா மொழிக்குமே கிடைக்காத ஒரு பாக்கியம், தமிழில் மட்டுமே அற்புதமான குணச்சித்திர நடிகர்கள் மற்றும் நகைச்சுவை நடிகர்கள் வாய்த்தார்கள்.

ஒரு பாலையா, எம் ஆர் ராதா, மனோரமாவை போல மற்ற மொழிகளில் காணவே முடியாது.

நகைச்சுவையை எடுத்துக் கொண்டால் தமிழ் முதலிடம் மலையாளம் இரண்டாவது இடம்.

ஆனால் இரண்டிற்குமே மலையாள வித்தியாசம் உண்டு.

ஏனெனில் கலைவாணர் என்எஸ்கே, தங்கவேலு, வி.கே.ராமசாமி சந்திரபாபு, சுருளிராஜன் கவுண்டமணி, வடிவேலு, விவேக் என நகைச்சுவை நடிகர்களுக்கு பஞ்சமேயில்லை.

இவர்களில் ஒரு பெயர் மட்டும் விடுபட்டுள்ளது. அவர் வேறு யாருமல்ல அல்ல, சிகே. நாகேஷ் தான்.

சிறுவயதில் காஞ்சிபுரம் ராஜா தியேட்டரில் நல்ல நேரம் (1972), லட்சுமி டாக்கிஸில் உலகம் சுற்றும் வாலிபன்(1973) உரிமைக்குரல் (1974) போன்ற படங்களை நாம் முதன்முறையாக பார்க்கும் போது நாகேஷ் தெரிந்தால் அவ்வளவுதான்.

நாம் வளர வளர அவரது பழைய படங்களை பார்க்க பார்க்க, காலம் ஓடிய போது தான் நாகேஷ் என்பவர் எவ்வளவு பெரிய ஜாம்பவான் என்பது புரிய ஆரம்பித்தது.

எதற்காக நாகேஷை தனியாக ஜாம்பவான் காமெடி நடிகர்கள் பட்டியலில் இங்கே வைக்காமல் தனியாக குறிப்பிடுகிறோம் என்றால் தமிழ்சினிமா நகைச்சுவை வரலாற்றை இரு கூராய் போடவேண்டுமென்றால் அது நாகேசுக்கு முன், பின் என போட்டாக வேண்டும் என்பதால் தான் வரையறுக்கமுடியும்.

வெறும் வசனங்களால் மென்மையாய் போய்க்கொண்டிருந்த நகைச்சுவையை, முதன் முதலில் உடல் மொழியால் பேசிவிறுவிறுப்பான பாணியில் கொண்டுபோனவர் அவர்தான்.

இயக்குநர் ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை (1963) படத்தில் மனோரமா வீட்டுக்குள் புகுந்து அவரை காதலிக்க முற்படுவார்.

அந்த நேரம் பார்த்து மனோரமாவின் அண்ணன் ஜெமினி பாலகிருஷ்ணன் வந்துவிடுவார்.

ஏதோ பேசி அவரை சமாளிக்க ஆரம்பித்து கடைசியில் ஜெமினி பாலகிருஷ்ணனையே திட்டும் அளவுக்கு நிலைமையை மடை மாற்றி விடுவார் நாகேஷ். தாக அவர் கையாண்ட உடல் மொழியோடு பேசும் வசன வித்தை, அதுவரை தமிழ்திரையுலகம் காணாத ஒன்று.

கண்டிப்பாக இயக்குனர் ஸ்ரீதராலேயே அவ்வளவு துல்லியமாக அந்த காட்சியை விவரித்து சொல்லி தந்திருக்க முடியாது

சிவாஜியின் திருவிளையாடல் (1965) படத்தில் பரிசு கிடைக்காத ஏமாற்றத்தோடு கோவிலில் தனியாக, ஆனால் பலரும் சுற்றியிருப்பதாக நினைத்துக்கொண்டு புலம்புவார் தருமி. அந்த ஏழைப்புலவன் பாத்திரத்தில் நாகேஷ் காட்டிய நடிப்பு, வெறித்தனமான ஒன்று.

எம்ஜிஆரின் அன்பே வா(1966) படத்தில்,

“அற்புதமான சீசன்,

அருமையானபங்களா

அள்ளிக்கொடுக்க வள்ளல் நீங்க

அக்காவும் மாமாவும் அங்க

ஆசைக்கு உரிய கண்ணம்மா இங்க

கிளிமாதிரி பொண்ணு

கிட்டப்போனா புலிமாதிரி பாயறா..

அடப்போய்யா.. சிரிக்காமா என்ன பண்றது?”

நொந்துபோன மனநிலையில் எம்ஜிஆரிடம் நாகேஷ் பேசும் எட்டே எட்டு மைக்ரோ வரிகள்..

நொந்துபோன மனநிலை என்றாலும் ‘’அற்புதமான,

அருமையான , அள்ளிக்கொடுக்க ஆகிய வார்த்தைகளை சொல்லும்போது அவர் காட்டும் பிரமிப்பும், கடைசியில் அட போய்யா என்று அத்தனை சலிப்போடும் சொல்லும் விதம்…

எத்தனையெத்தனை பாவனைகள். அதுதான் நாகேஷ் நாகேஷ்..நாகேஷ்.

எப்போதும் அளவுக்கு அதிகமாக சிரிக்க வைப்பவர்களின் பின்னணியில் நிச்சயம் ஒரு சோகவரலாறு இருக்கும், நாகேசுக்கும் அப்படியே.

கொழுகொழுவென குண்டாக இருந்த நாகேசுக்கு, இயற்பெயர் குண்டுராவ். தாராபுரத்தில் ஒரு ரயில்வே ஊழியரின் மகன். பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்து தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்தபோதுதான் அம்மை வந்து முகமே கொத்து போடப்பட்ட அம்மிக்கல் போல் ஆகிவிட்டது

கண்ணாடியில் பார்த்து பார்த்து அழுத குண்டுராவ் ஒரு கட்டத்தில் அழுகையை நிறுத்திக் கொண்டு சுய பச்சாதாபத்தை போய்வா என்று சொன்னார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் பெரும் பின்னடைவே சாதனைக்கு தயார்படுத்தும் என்கிற அடிப்படையில், நாடகப்பக்கம் இழுத்தது இயற்கை.

வயிற்றுவலிக்காரனாய் நாகேஷ் நடித்த ஒரு நாடகத்திற்கு தலைமை தாங்கினார் புரட்சி நடிகர் எம்ஜிஆர். நாடகம் பார்த்த அவருக்கு தெரிந்து விட்டதுபோல..

அங்கேயே நாகேசை அழைத்து “பின்னாளில் நீ பெரிய நடிகனாய் வருவாய்” என்று மனதார வாழ்த்தினார். அதே நாகேஷின் கால் ஷீட்டுக்காக பின்னாடி எம்ஜிஆரின் பட தயாரிப்பாளர்கள் காத்து கிடக்க வேண்டிய நிலைமை உருவானது என்பது எவ்வளவு ஆச்சரியமான விஷயம்.

நாடக மேடையில் எம்ஜிஆர் வாழ்த்திய பிறகு நாகேஷின் சினிமா ஆசை இன்னும் அதிகமாக கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.

தமிழ் சினிமாதான் என்று முடிவு எடுத்து விட்ட நாகேஷ், உடனடியாக நாடியது நண்பனாய் அமைந்த நடிகர் பாலாஜியிடம்.

நாகேஷின் ஆரம்பகால, தள்ளாட்டமிக்க வாழ்க்கையில் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் நடிகர் பாலாஜி நண்பனாக கிடைத்தது தான்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் நண்பன் என்பதையும் தாண்டி நாகேசுக்கு பாலாஜி ஒரு கடவுளாகவே திகழ்ந்தார். காரணம், நாகேஷ் என்ற நண்பனுக்காக அலைந்து அலைந்து படவாய்ப்புகளை தேடிந்தந்தவர் பாலாஜிதான்.

நாகேசின் பிறந்தநாள் விவரம்போல அவரின் முதல் படமும் எதுவென்பதும் சர்ச்சையே..

1959-ல் வெளியான தாமரைக்குளம் படத்தில் நாகேசுக்கு தாம்தான் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததாக இயக்குர் – தயாரிப்பாளர் முக்தா வி சீனுவாசன் சொல்வார்.

ஆனால் அதற்கு முன்பே பாலாஜி கதாநாயகனாக நடித்து வெளியான மனமுள்ள மறுதாரம் (1958) படத்தில் நாகேஷ் நடித்துவிட்டார் என்ற விவரமும் உண்டு.

இதன்பிறகு சில படங்களில் நாகேஷ் வந்துபோனாலும் அவருக்கு மிகப்பெரிய பிரேக் என்றால் அது ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம் (1962) படம்தான்.

இந்தப் படத்தில் நாகேஷின் பாத்திரம் அமைந்ததே ஒரு வித்தியாசமான கதை.

வார்டுபாய் பாத்திரத்தில் நடிக்கவேண்டிய ராமராவ் (அப்ளாச்சாரி) வருவதற்கு லேட் ஆனதால், இன்னொரு சிறிய பாத்திரத்தில் நடிக்க வந்திருந்த நாகேசை வைத்து ‘சும்மானாங்காட்டியும்’ என ரிஹர்சல் பார்க்கப்பட்டது.

ரிஹர்சல் என்றாலும் டைரக்டர் ஸ்ரீதர் முன்பாக, அதுவரை இல்லாத அளவிற்கு வசனங்களை தாண்டி புதுமையான முறையில் உடல் மொழி வாயிலாக காமெடியில் அப்படியொரு மிரட்டலை காட்டினார் நாகேஷ்.

அந்த காலத்தில் ஹாலிவுட்டில் கொடி கட்டி பறந்த காமெடியன் ஜெர்ரி லூயிஸை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியதை ஸ்ரீதர் உணர்ந்தார்.

அப்புறமென்ன, ராமராவ் பாத்திரம் நாகேசுக்கு வந்து, இவர் பாத்திரம் அவருக்கு போய்விட்டது.. அதைவிட நாகேஷின் திறமைக்கு தீனி போடும் விதமாக ஏராளமான காட்சிகள் அமைக்கப்பட்டன.

இதன்பிறகு எம்ஜிஆருடன் பணத்தோட்டம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு நாகேஷுக்கு கிடைக்கிறது. 1963-ல் பொங்கல் வாக்கில் வெளியான பணத்தோட்டம் படத்தில் காமடி டிராக் தனியாக வரும்.

பின்னாளில் கவுண்டமணிக்கு காமெடி சீன்களை அமைத்துத் தந்து வசனங்கள் எழுதிய நகைச்சுவை நடிகர் ஏ. வீரப்பன் உடன் நாகேஷ் பணத்தோட்டம் காமெடி காட்சிகள் பின்னி பெடலெடுத்து இருப்பார்.

இதற்குப் பிறகு அதே 1963-ல் நாகேஷுக்கு மிகப்பெரிய பிரேக்காக அமைந்தது, எம்ஜிஆரின் பெரிய இடத்துப் பெண் படம். வில்லனால் பாதிக்கப்படும் படிப்பறிவில்லாத ஏழை, ஸ்டைலிஷ் பணக்காரன் வேடமிட்டு வில்லன் மகளையே மணமுடிக்கும் சகலகலா வல்லவன் படங்களுக்கு தாத்தா படம்தான் பெரிய இடத்துப் பெண்.

இந்தப் படத்தில் கதையின் முக்கிய மையப்புள்ளியே நாகேஷ்தான்.

வில்லனின் சூழ்ச்சியால் பக்கா கிராமப்புற கதாநாயகனுக்கு எதிராக சூழ்ச்சி செய்வதும் பின்னர் தவறை உணர்ந்து கிராமத்தானையே நகரத்து ஆசாமிபோல் டிப் டாப்பாக மாற்றி பணக்கார கதாநாயகியை கைப்பிடிக்கவைக்கும் முக்கிய பாத்திரம்.

கதாநாயகனோடு சேர்த்து பேசப்படும் பாத்திரம் நாகேஷுக்கு முதன் முதலாய் கிடைத்தது எம்ஜிஆரின் பெரிய இடத்து பெண் படத்தில்தான்.

அதன்பின் காதலிக்க நேரமில்லை, எங்க வீட்டு பிள்ளை, திருவிளையாடல், ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, அதே கண்கள், ஊட்டி வரை உறவு, தில்லானா மோகனாம்பாள், வசந்தமாளிகை என தமிழ் சினிமாவின் காவியங்கள் அனைத்திலும் இவரின் பாத்திரங்கள் நாயகன்களுக்கு அப்படியொரு சவால் கொடுத்தவை.

டாப் ஸ்டார்களான எம்.ஜிஆர், சிவாஜியே காத்திருக்க வேண்டிய அளவுக்கு செம பிசியாக இருந்தவர் நாகேஷ் என்றால், மற்ற நடிகர்களின் காத்துக் கிடப்புபற்றி சொல்லியா தெரிய வேண்டும்?

நீர்க்குமி்ழி, சர்வர் சுந்தரம், எதிர் நீச்சல் போன்றவை யெல்லாம் நாகேசின் தனி ஆவர்த்தனத்திற்காகவே எடுக்கப்பட்டவை.

அதிலும் சர்வ சுந்தரம் படம், நாகேஷின் திறமைகளை மொத்தமாய் அள்ளி கொட்டிய படம். நாகேஷ் முன் முத்துராமன்- கே.ஆர்விஜயா ஜோடியே அந்தப் படத்தில் அவுட் ஆப் போகஸ் ஆகிப்போனது.

சர்வர் சுந்தரம் படம் என்று வரும்போது இங்கே இன்னொரு நெஞ்சை உருக்கும் சம்பவத்தை சொல்லியே ஆக வேண்டும்.

தனது தாயார் மறையும் போது நாகேஷ் வெளியூரில் இருந்தார். தகவல் தொடர்பு அவ்வளவாக முன்னேறாத காலம் அது. எப்படியோ தகவல் தெரிந்து நாகேஷ் வந்து சேர்வதற்குள் தயாரின் இறுதிச்சடங்கு நடந்து சிதைக்கு தீ வைக்கப்பட்டுவிட்டது.

அமராவதி ஆற்றங்கரையில் தாயாரின் உடல் எரியும் காட்சி மட்டுமே காண முடிந்தது என்று அவரது வாழ்க்கை வரலாறு சொல்கிறது.

இந்த காட்சியை தான் சர்வம் சுந்தரம் படத்தில், சர்வர் மகன் மீது பெரும் பாசம் வைத்திருக்கும் எஸ் என் லட்சுமி, நாகேஷ் மிகப்பெரிய நடிகன் ஆகிவிட்ட பிறகு மகன் மடியில்தான் உயிர் விட வேண்டும் என்று விரும்புவார். அவர் ஆசையை நிறைவேற்றும் வகையில் உடன் இருப்பதாக நாகேஷ் சத்தியம் செய்து கொடுப்பார்.

ஆனால் துரதிஷ்டவசமாக தாயார் வீட்டுக்குள்ளேயே சிறு விபத்தில் சிக்கி உயிரிழக்கு போராடிக் கொண்டிருப்பார்.

நடிகக்கப் போயிருக்கும் நாகேஷ் வெளியூரில் மாட்டிக் கொள்வார்.

அவர் வருவதற்குள் தாயார் இறந்து எல்லாமே நடந்து முடிந்துவிடும்.

நாகேஷின் வாழ்வில் நடந்த நிஜ சம்பவம் சர்வர் சுந்தரம் படத்தில் இப்படி காட்சிப் படுத்தப்பட்டிருக்கும்.

நாகேஷின் திரைப்பட பயணத்திற்கு மீண்டும் வருவோம்.

பெரிய நடிகர்களை வைத்து தனது இயக்குனர் வாழ்க்கையை ஆரம்பிக்க விரும்பாமல்

லோ பட்ஜெட்டில் மட்டும் கண்ணும் கருத்துமாய் இருந்த இயக்குநர் கே.பாலசந்தருக்கு அடுத்தடுத்து படங்கள் நடித்துக் கொடுத்து கைகொடுத்து ஏற்றிவிட்ட ஏணி நாகேஷ் என்று கூட சொல்லலாம்.

அபூர்வ ராகங்கள் படத்தில் அந்த குடிகார டாக்டர் சூரியாக அசத்திய விதம்..அனுபவி ராஜா அனுபவி, பட்டணத்தில் பூதம் போன்ற படங்களெல்லாம் ஹீரோவுக்காக உருவாகி, காமெடியன் நாகேசின் வசம் முழுமையாக சிக்கியவை.

1962-ல் எடுத்த வேகம், 1970கள் துவக்கம்வரை அப்படியொரு ஜெட் வேகத்திற்கு இணையானது.

நாகேஷ் என்ற மகா நடிகன் கதாநாயகனாகவும் நடித்தார். கதாநாயகன்களை தூக்கிவிடவும் நடித்தார். சித்தி, பூவா தலையா போன்ற படங்களெல்லாம் அந்த ரகம்தான்..

இன்னொரு முக்கியமான விஷயம், நாகேஷ் – மனோரமா ஜோடி என்றால் தியேட்டரில் அப்ளாஸ் அள்ளும். டைரக்டர், தயாரிப்பாளர்களை தாண்டி படத்தை வாங்கும் விநியோகஸ்தர்களே, நாகேஷ்-மனோரமா ஜோடி உண்டா என்று கேட்கும் அளவுக்கு வர்த்க நிலைமைபோனது.

காமெடி என வரும்போது, உடன் நடித்த எம்ஆர் ராதா, தங்கவேலு, விகே ராமசாமி போன்ற ஜாம்பவான் களோடு இரண்டறக்கலந்து ஒட்டுமொத்த சீனுமே அற்புதமாக வரவழைக்கும் நாகேசின் தனித்திறமை, படம் பார்க்கும்போது மட்டுமே தெரியும், புரியும்..

துரதிஷ்டவசமாக எம்ஜிஆர் மற்றும் மனோரமாவுடன் ஒரே நேரத்தில் உரசல் வர, நாகேசின் நிலைமை பின்னடைவை சந்தித்தது. எம்ஜிஆருக்கு அஞ்சி, படத்தயாரிப்பாளர்கள் நாகேசுக்கு வாய்ப்பு தருவதை தவிர்த்தனர். எம்ஜிஆரின் படங்களில் நாகேஷ் இடத்தை சோ நிரப்ப ஆரம்பித்தார்.

ஒருவழியாக உரசல் முடிவுக்கு வந்தது. மறுபடியும் உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல் என எம்ஜிஆரின் பிளாக் பஸ்டர் படங்களில் நாகேசின் ஆதிக்கம் கொடிகட்டிப்பறந்தது.

கே.பியைபோல இந்த காமெடி ராட்சசனுக்கு பின்னாளில் சரியாக தீனிபோட்டவர் கமல்ஹாசன் மட்டுமே. அதுவும் விதவிதமாய்..

அபூர்வ சகோதர்களில் அப்படியொரு வில்லனாய் நாகேஷ் துவம்சம் செய்வார் என்று நாமெல்லாம் நினைத்துப்பார்த்திருப்போமா?

இந்திரன் சந்திரன் படத்தில் சதா சபலத்தோடு அலையும் அமைச்சர், மைக்கேல் மதன காமராசனில் ஃபிராடு மேனேஜர் அவினாசி, அவ்வை சண்முகியில் குடிகார மேக்கப்மேன் ஜோசப், பிணமாகவே நடித்தாலும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்த மகளிர் மட்டும், கண்கள் கலங்க வைத்த ‘நம்மவர்’- இப்படி வரிசையாய் அசத்தியவருக்கு கடைசி படம்கூட கமலோடே அமைந்தது. தசாவதாரம்தான் அது.

செல்லப்பா, ராமய்யா, சுந்தரம், தருமி மாடிப்படி மாது, வைத்தி. அவினாசி போன்ற பாத்திரங்கள் இன்றைக்கு பார்க்க நேர்ந்தாலும் புதுப்புது விஷயங்கள் தென்படும்.. அவ்வளவு நுணுக்கங்கள் நாகேஷின் வித்தியாசமான நடிப்பில் கொட்டிக்கிடக்கும்.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் மற்றும் சில நேரங்களில் சில மனிதர்கள் ஆகிய படங்களும் நாகேஷின் திரைப்பட வரலாற்றில் நடிப்பின் மைல்கல்லாக என்றென்றும் பறைசாற்றும்.

இப்படிப்பட்ட கலைஞனை மத்திய அரசு, பத்ம விருதுகள் விஷயத்தில் கண்டுகொள்ளவே யில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

நம்மவர் படத்திற்கு மட்டும் சிறந்த துணை நடிகர் விருது தந்தார்கள்.

மாபெரும் கலைஞன், நாகேஷின் 92 வது பிறந்தநாள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்